இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமா ???
ஆமாம் தரப்பட வேண்டும்.
ஏன் தரப்பட வேண்டும் ?
இஸ்லாமியர்களில் பலரும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி இருப்பதால்.
அப்பொது கிறிஸ்துவர்களுக்கு தர வேண்டாமா ? அவர்களில் அனைவரும் முன்னேறிவிட்டனரா ??
இல்லை அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளனர்.
இந்துக்களில் அனைவரும் முன்னேறிவிட்டனரா ?
இல்லை. இன்னமும் பல சாதியில் பலர் முன்னேற்றம் அடையவில்லை.
முன்னேற்றத்தின் அளவு கோல் என்ன ?
பொருளாதார முன்னேற்றத்தை வைத்தே ஒருவர் முன்னேறிவிட்டார் என்று அளவிடப்படுகிறார்.
கடந்த 75 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கொடுத்தும் ஏன் ஒரே சீராக அனைவரும் பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை ??
ஓருவருக்கு பிறப்பால் கிடைத்த ஜாதி அடையாளத்தினாலோ மத அடையாளத்தினாலோ, ஒரு தலைமுறை பயன் அடைந்தவுடன் அடுத்த தலைமுறைக்கும் அந்த இட ஒதுக்கீடு கிடைக்கும் போது ஏற்கனவே முதல் தலைமுறைக்கே இட ஒதுக்கீடு கிடைக்காதவர்கள் பின் தங்கிவிடுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக பல தேர்வுகளில் பட்டியல் இனத்தவர்களின் குறைந்த பட்ச மதிப்பெண் ( CUTOFF MARK ) மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினரை காட்டிலும் அதிகமாக உள்ளது. இது உணர்த்துவது என்ன ? தொடர்ந்து ஒரு சிலருக்கே பல தலைமுறையாக இட ஒதுக்கீடு பயன் கிடைத்து அந்த சமுதாயத்திலேயே சில குடும்பங்களுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன, பல குடும்பங்கள் இன்னமும் தத்தளிப்பு என்ற நிலை தொடர்கிறது.
இன்றைக்கும் (2024) பல மாநிலங்களில் பல சாதி சங்கங்களும் பல மத இனத்தவரும் தங்களுக்கும் இட ஒதுக்கீடு என்று போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். 75 வருட சுதந்திர நாட்டில் இன்னமும் பலரும் முன்னேறவில்லை என்றால் இட ஒதுக்கீடு முறை மாபெரும் தோல்வி என்று தானே பொருள்.
மஹாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த மராட்டாக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும், தமிழ்நாட்டில் மன்னராட்சி காலத்தில் ஆட்சி பீடத்தில் இருந்த தேவர், மறவர், வன்னியர்கள், நாயக்கர்கள் எல்லாம் பிறபடுத்தப்பட்டவர்கள். குஜராத்தில் பட்டேல்கள், படிதார், இராஜஸ்தானில் உலகத்திற்கே வட்டிக்கு பணம் அளிக்கும் மார்வாடிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் 300 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளார்கள், அவர்கள் எப்படி அவர்களின் ஆட்சியிலேயே ஓடுக்கப்பட்டிருபார்கள்???. அதே போல் கிறித்துவர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தெரு பேர்களில் மட்டுமே சாதிப் பெயரை அழிக்க முடிந்தது. நடைமுறை வாழ்க்கையில் இன்னமும் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் எல்.கே.ஜியில் கூட சேர்க்க முடியாது.
உண்மையான சமூக நீதி என்ன ?
அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற சம வாய்ப்புகள் கிடைத்தால் அதுவே உண்மையான சமூக நிதி.
இன்று நாம் சந்திக்கும் அடிப்படை சவால்கள் என்ன ?
1. சுத்தமான காற்று இல்லை.
2. குடி தண்ணீருக்கு பஞ்சம், அதிக விலை, வறட்சி, கழிவு கலப்பு
3. சுத்தமான உணவு கிடைப்பதில்லை
4. அனைவருக்கும் வீடுகள் இல்லை.
5. வெப்ப நிலை அதிமாகி கொண்டே வருகிறது.
6. நோய்கள் அதிகமாகி வருகிறது. மருத்துவ செலவுகள் எகிறி வருகிறது.
ஆனால் இதை எல்லாம் மறக்கடித்து அரசியல்வாதிகள் மக்களின் மனதை மழுங்கடிக்க :"சாதி / மதம் " என்ற பிரிவினைவாதத்தை பட்டை தீட்டி வருவது மக்களிடம் கடும் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனால் இந்த அரசியல் கட்டமைப்பில் இருந்து மீள முடியவில்லையே என்ற இயலாமை நாட்டில் நடக்கும் அனேக குற்றங்களுக்கு காரணமாகின்றன.
மக்களுக்கு என்ன தேவை ?
மக்கள் அனைவருக்கும் தேவை பொருளாதார முன்னேற்றமே. அதற்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அது மக்களின் ஏழ்மை நிலைமைக்கு ஏற்பவே வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் முஸ்லிம் , கிறிஸ்த்துவ, இந்து, சீக்கிய என்ற அனைத்து மத ஏழைகளுக்கும் வாழ்வில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். அதிலும் அனைத்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கல்வி முறை, "மார்க்கு"களுக்காக படிக்கும் முறை மாறி திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
இப்பொழுது வழங்கப்படும் சாதி / மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கும் வரை மக்களிடையே ஓற்றுமையில்லாமல் ஓயாத போராட்டங்களில் நமது நேரத்தை அரசியல் வாதிகள் வீணடிப்பார்கள்.
இட ஒதுக்கீடு இல்லாமலே சாதித்து காட்டிய இந்தியர்கள் :
இட ஒதுக்கீட்டை ஒதுக்கி தனது திறமை நம்பிய இந்தியர்கள் பலரும் பல வெளிநாடுகளில் தங்கள் திறமையால் பெரிய பதவிகளுக்கு வந்து நமது நாட்டிற்கு வந்து பெருமை சேர்க்கிறார்கள்.
உண்மையாகவே ஏழ்மையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்னேற சம வாய்ப்பு கிடைக்க வழி செய்வோம். அனைவரின் முன்னேற்றத்தை கொண்டு நாடும் ஆரோக்கியமாக முன்னேற வேண்டும்.
1 மே 2024

Comments
Post a Comment
Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்