இந்த வாரத்தில் நடந்த செய்திகள் இரண்டு:பரந்தூர் சென்ற விஜயை வாழ்த்துவோம் :
கடந்த 900 நாட்களுக்கு மேலாக தங்கள் விவசாய நிலத்தையும் தங்கள் நீர் நிலைகளிலும் சென்னை பசுமை விமான நிலையத்திற்கு தாரை வார்க்க கூடாது என்று ஜன நாயக முறையில் அற வழியில் போராடும் கிராம மக்களை மாநில அரசோ மத்திய அரசோ கண்டுக் கொள்ளவில்லை. விவசாயமும் தண்ணீரும் வேண்டாம் , நாங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வர விமான நிலையமே தேவை என்று நினைக்கும் மக்களும், அரசியல்வாதிகளும் உள்ள ஒரு நாட்டில் புதியதாக த. வெ.க அரசியல் கட்சி தொடங்கியவர் வருகிறார் என்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.
விஜய் இதனை ஒரு அரசியல் ஸ்டண்ட் ஆகவே செய்தாலும் ஒரு உண்மையான விவசாயிகளின் போராட்டத்தின் மீது சில மணி நேரமாவது மீடியாவின் வெளிச்சம் விழும்.
தண்ணீரும் தமிழ்நாடும் :
தண்ணீர் பற்றாக்குறையால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா உடன் நெடுநாட்களாக போராடும் தமிழகம், எப்படி இருக்கும் நீர் ஆதாரங்களையும் இழக்க துணிகிறது?
எது நம்மிடம் இல்லையோ எது நமக்கு மிக அவசியமோ, அதை நாம் காப்பாற்றுவதில் கவனம் தேவையா ? இல்லையா?
விமானங்கள் பறக்காவிட்டாலும் நாம் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா ?
எது வளர்ச்சி எது வீக்கம் என்ற முதிர்ச்சி நம்மிடம் இல்லை.
கடந்த 50 வருட தமிழ் நாடு அரசியலுக்கு வந்தவர்கள் மிக பெரும்பான்மையானவர்கள் ஆற்று மணலை விற்று தான் பெரும் பணம் ஈட்டியுள்ளார்கள். இதனால் தான் தமிழ்நாட்டில் எந்த ஆறிலும் தண்ணீர் ஓடக் கூடாது என்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்புகிறார்கள் மற்ற மாநில அரசியல்வாதியை காட்டிலும்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு , ஏரிகள் ஆக்கிரமிப்பு சென்னையில் மழைக் காலங்களில் வெள்ளம் வந்து வருடா வருடம் திண்டாட்டம். நீரை எந்த விதத்திலும் சரியாக கையாள தெரியாத தமிழகம், மேலும் மேலும் நீர் ஆதாரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்துக் கொண்டே போவதில் யாருக்கு நன்மை??
தாகத்திற்கு தண்ணீரும் உண்பதற்கு உணவும் தானே வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை ??? அதுவும் விளை நிலங்கள் தான் வேண்டும் என்று இத்தனை அடக்குமுறைகளை அரசாங்கம் நியாயமான உரிமை போராட்டத்தை அடக்குகிறது.
வறண்ட புல்லு கூட முளைக்காத எத்தனை நிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அதை விடுத்து ஏன் மூன்று போகம் விளையும் விவசாய நிலமே விமானம் பறக்க வேண்டும் என்று ஏன் பிடுங்க வேண்டும்.?
சென்னை நகரை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது
தமிழ்நாட்டின் வட கிழக்கில் இருப்பதாலேயே சென்னை தலை நகராக இருப்பதன் தகுதியை இழக்கிறது. அதுவும் தவிர பருவ நிலை மாற்றத்தினால் கடல் உயர்ந்து வருவதால் சென்னை நகரின் பல பகுதிகள் நீருக்கடியில் முழுகும் அபாயத்தில் உள்ளது.
தமிழ் நாட்டின் தலை நகரை மாநிலத்தின் மத்தியில் திருச்சி போன்ற நகருக்கு அருகே நீர் நிலைகள், விவசாய நிலங்கள், மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிக்காமல் ஒரு புது விமான நிலத்தை எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களில் புதிய விமான நிலையத்தை அமைத்து அதன் அருகே புதிய தலை நகரத்தையும் உருவாக்க வேண்டும்.
இரண்டாவது செய்தி: நடிகர் திரு அஜித் குமார் துபாயில் நடந்த அதி வேக கார் பந்தயத்தில் மூன்றாவதாக வந்து ஜெயித்த விஷயம்.
அஜித் என்றுமே சமூக அளவில் மிக பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர். அதிலும் இந்த போட்டியை காண வந்த ரசிகர்களிடமும் "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று கோஷம் போடும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எப்போ நல்லா வாழப் போறீங்க ?" என்ற மிகப் பொறுப்புள்ள மனிதராக ஒரு கேள்வி கேட்டார்.
அதே போல் சாலை விபத்தில் அடிபடும் நபர்களை "தயவு செய்து ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பவதால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி எச்சரிக்கை செய்தியும் கொடுத்தார்" அதுவும் அஜித்தின் நண்பரை இது போல் ஆட்டோவில் ஏற்றி சென்றாதால் அவரின் முதுகு தண்டு வடம் முழுவதுமாக பாதிப்படைந்து அவர் இனிமேல் வாழ் நாள் முழுவதும் செயலிழுந்ததற்காக மிகவும் வருத்தப்படிறிருகிறார்.
ஆனால் அஜித் சார் " சாலை விபத்துகளுக்கு மூலக் காரணமே வேகம் -அதி வேகம் தான் "
அதாவது உங்கள் சொல், சிந்தனை அனைத்தும் உங்கள் ரசிகர்களின், பொது மக்களின் பாதுகாப்பு குறித்து இருக்கிறது. ஆனால் உங்கள் செயல் , ரேஸ் போகும் ஆர்வம் தான் என்றைக்கும் இளைஞர்களை தங்கள் பால் ஈர்க்கிறது.
இன்று சாதாரணமாக சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் பயத்தில் யார் நம்மை எந்த விதத்தில் எந்த திசையில் இடிப்பார்களோ என்ற பயத்தில் நடக்கும் படியாக அதி வேகத்தில் சைலென்சரை எடுத்து விட்டு லைசென்ஸ் இல்லாமல் பைக்கையும் காரையும் ஓட்டுகிறார்கள்.
இன்று இந்தியா உலகளவில் சாலை விபத்துகளில் முன்னணியில் உள்ளது. சாலை விபத்து இறப்புகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளாக தங்களை முன் மாதிரியாக கொண்டு பலரும் சாலைகளை ஒரு ரேஸ் டிராக்காகவே நினைத்து வண்டி ஓட்டி தானும் காயம் பட்டு பலரையும் காயப்படுத்தி , கொன்று இன்று இந்தியாவே ஒரு சாலை பாதுகாப்பு அற்ற நாடாக உலகளவில் தலை குனிந்து நிற்பதாக , இந்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மிகவும் வெட்கப்படுவதாக வருத்தப்படுகிறார்.
இந்த சூழ்நிலையில் நீங்கள் மிகவும் செலவு பிடிக்கும் அதி பணக்காரர்கள் மட்டுமே விளையாடக் கூடிய "அதி வேக கார் ரேஸ்" பந்தயங்களில் தாங்கள் பங்கு பெற்று வெற்றியும் பெற்றது, சமுதாயத்தில் முக்கியமாக ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களை போல் செலவு செய்ய முடியாமல் இது போன்ற கார் ரேஸுகளில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் உங்கள் ரசிகர்களும் இளைஞர்களும் அனைத்து பொது மக்களும் பயன் படுத்தும் சாலைகளையே ரேஸ் பந்தயமாக நினைத்து வண்டிகளை விரட்டி சக மக்களை கொன்று, முடமாக்கி வருகிறார்கள்.
இதில் நீங்கள் இந்த அதி வேக பந்தயங்களை ஊக்குவிக்கும் விதமாக, உங்கள் திரைபடங்களின் வெற்றிகளின் போது கூட பேட்டி தராத நீங்கள், இந்த வெற்றிக்கு பிறகு மிக உற்சாகமாக பேட்டி தருகிறீர்கள். தமிழ் நாடு அரசாங்கம் சென்னையில் கார் ரேஸ் நடத்துவதை பெருமையாக பாராட்டுகிறீர்கள்.
எந்த நாட்டில் ஏற்கனவே பொறுப்பற்ற முறையில் வண்டிகளை ஓட்டுபவர்கள் இருக்கும் நாட்டில், தெருவிற்கு தெரு சாராயம் ஊற்றி கொடுக்கும் நாட்டில் மிக அதி வேகமாக வண்டிகளை ஓட்ட ஊக்கப்படுத்தினால் நாட்டில் ஊனமுறுவோர்களின் எண்ணிக்கையும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தான் அதிகரிக்கும். வாழ்க்கை என்பது "மங்காத்தா" இல்லை அஜித் குமார்.
ஆனால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்புவாரா ? என்ற கவலையுடன் எத்தனை "ஷாலினி"க்கள் தினம் தினம் பதறுகிறார்கள். இங்கே உங்களை வழியனுப்பி விட்டு உங்களுக்கு விபத்து என்றவுடன் குடும்பத்துடன் துபாய்க்கு பறந்து வருகிறார்.
"விவேகம்" என்பது உங்கள் பட டைட்டில் அளவிற்கு தானா ?
அனைவரும் மீதும்
அன்பான
அக்கறையுள்ள
அஜித் குமார்
ஆதரவாளர்கள்
அனைவருக்கும்
ஆணையிடுங்கள்
உடனடியாக
ஊரறிய
"சாலைகள் ரேஸ் டிராக் அல்ல,
நான் சாலையில் பொறுப்புடன் நிதானமாக
வண்டிகளை ஓட்டி
அனைவரையும் பாதுகாப்பேன்" என்று.
அது போல் நீங்களும் அடிக்கடி ரேஸுக்கு போகிறேன்
"வேதாளம்" போல் ஓடிக் கொண்டே இருக்க
உங்கள் "காதலுக்கு மரியாதை" தரும் மனைவிக்கு
"விஸ்வாசுமாக" இருந்து
"வாலி"யில் வரும் "வில்லன்"
அஜித்துக்கு குட்பை சொல்லுங்கள்
உங்கள் "விடாமுயற்சி"க்கு வாழ்த்துக்கள்
உங்கள் "குட் பேட் அக்லியில்"
சமுதாயத்துக்கான "குட்"டை மட்டுமே
விரும்பும் "சிட்டிசன்"
ஏழை மக்களும் உங்களை பார்த்து எளிமையாக விளையாடக் கூடிய
விளையாட்டுகளை தேர்ந்து எடுத்து விளையாடுங்கள். உங்கள் மனைவி விரும்பி விளையாடும் "Shuttle Badminton" பூப்பந்து போன்ற அனைவராலும் குறைந்த செலவில் விளையாடக் கூடியதை தேர்ந்து எடுங்கள்.
"பெற்றோரை மதிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறுவதை காட்டிலும்
நீங்கள் "வாழ்ந்து காட்டி வழிக் காட்டுவது" தான் அனைவருக்கும் அதிகம்
தாக்கத்தை தரும்.
அதனால் உங்கள் கார் ரேஸ் "அட்டகாசங்களுக்கு"
இனிமேல் "ரெட்" கார்டு
என்பதை உங்கள் மகள், மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
உணருங்கள்.
இன்று 23 ஜன் 2025 - உலகத்தையே தன் தாக்கத்தினால் மிரளச் செய்து பின் முக்கிய தருணத்தில் ஆன்மீக பேரொளியாக மாறிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள். நாட்டிற்காக உடல் துறக்கலாம் ஆனால் சாலையில் தேவையில்லாமல் வேகமாக சென்று உடல் உறுப்பு தானம் செய்யும் நிலைக்கு நம் வாழ்வை வீணடிக்க கூடாது என்று நினைவு கூறும் நாள்.
சகிருட்டிஸ்
Sakritease 23 Jan 2025
No comments:
Post a Comment